மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
இந்திய அணி தற்போது, மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தின் முதல்படியாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது. அதில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் இந்திய அணி களம் காண தயாரானது. அதன்படி, இதுவரை இரண்டு இருபது ஓவர் போட்டிகள் நடைபெற்றுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றிப் பெற்றது.
இந்நிலையில், 3-வது இருபது ஓவர் போட்டி நேற்று (ஆகஸ்ட் 2) மேற்கிந்திய தீவுகளில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணி முதலில் டாஸ் வென்று, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்பின், மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கில் களம் கண்டது.
இந்த ஆட்டத்தில், மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்டிங் ஒரு பக்கம் தொடர்ந்து சரிந்துக் கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் கைல் மேயர்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர், 50 பந்துகளில் 73 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது, விக்கெட்டை புவனேஸ்வர்குமாரிடம் இழந்தார்.
இருபது ஓவர்கள் முடிவில், மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து, இந்திய அணி 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்கத்திலேயே இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டத்தை விட்டு பெவிலியன் சென்றார்.
இதன்பிறகு, சூர்யகுமார் யாதவ் 44 பந்துகளுக்கு 76 ரன்கள் எடுத்தார். மேலும், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் முறையே 24, 33 ரன்கள் எடுத்தனர்.
இந்நிலையில், இந்திய அணி 19 ஓவரிலேயே 165 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. இந்தப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருது சூர்யகுமார் யாதவ்வுக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெளிவந்த அட்டவணை; ஆசிய கிரிக்கெட் தொடரில் கர்ஜிக்குமா இந்திய அணி?