கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2015ம் ஆண்டில் இருந்து 12 ஆயிரத்தும் மேற்பட்ட செவிலியர்கள், தொகுப்பூதியத்தில் சுகாதாரத்யுறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்கள் பணியினை நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 7ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் அரசு மருத்துவர்களும், செவிலியர்களும் போராட்டம் நடத்தியபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் அவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு நில்லாமல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என, தேர்தல் வாக்குறுதியும் அளிக்கப்பட்டது. தற்போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, போராடிய செவிலியர்கள் மீது அரசு அடக்குமுறையின் ஏவி விட்டுள்ளது.
அதுபோல, பொதுவிநியோகத் திட்டத்தை செயல்படுத்த தனித்துறை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த 7ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுடன் பேச்சு நடத்தாமல், வேலைக்கு வராத நாட்களில் சம்பளம் கிடையாது என, தொழிலாளர் நலத்திற்கு எதிராக தி.மு.க., அரசு நடந்து கொள்கிறது. தங்களின் தேர்தல் அறிக்கையை, முதல்வரும் அமைச்சர்களும் மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்.
போராட்டம் நடத்துவோர் மீது அடக்குமுறையை ஏவாமல், சம்பளப் பிடித்தம் போன்ற தொழிலாளர் விரோதப் போக்கை கடைப்பிடிக்காமல், பேச்சுவார்த்யையின் வாயிலாக அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இப்பிரச்சனையில் முதல்வர் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு, தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வலுக்கும் போராட்டங்கள்; பிரதமர் மோடி இன்று ஆலோசனை!