தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை கடந்த மே மாதம் பதவி ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், ஒன்றரை ஆண்டுகள் கழித்து, இப்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன்படி, திமுக இளைஞரணி செயலாளரும், முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருக்கும் தர்பார் அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
‘உதயநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.
இந்த விழாவில் அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பேரவை கட்சித் தலைவர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் முதல்வர் குடும்பத்தினர் ஆகியோர் பங்கேற்றனர்.
மேட்டூர் அணை நிலவரம்: தொடர்ந்து உயரும் நீரின் அளவு..