‘திமுகவை வீழ்த்த கூட்டணியால் தான் முடியும்’ என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி தினகரன் “சென்னையில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முன் கூட்டியே தொடங்கி விட்டார்கள். மழை காரணமாக காலதாமதம் ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து விட்டோம். ஆனால், மழை காரணமாக பணிகள் முடிக்கவில்லை என சொல்லி இருக்க வேண்டும். கண்முன்னே குழி தோண்டி வைக்கப்பட்டுள்ளது. 80 சதவீதம், 90 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது என பொய் சொல்லாமல் உண்மையை மக்களிடம் சொல்லி இருக்கலாம்” என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய டி.டி.வி தினகரன், செய்ய முடிந்ததை சொல்லுங்கள். மக்களை ஏமாற்றாதீர்கள் என்றும், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை தன்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது தவறு இல்லை எனவும், ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஆறுமுகசாமி அறிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகியதாகவும், அதில் திமுகவின் செயல் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போலி கணக்குகள்..’ப்ளூ டிக்’ கட்டணம்…மீண்டும் வேலைக்கு வர அழைப்பு: அதிரடி காட்டும் எலான் மஸ்க்!
மேலும் அவர், நாடாளுமன்றத் தேர்தலில் மிகவும் பலம் வாய்ந்த கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதை, அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றும் கூறினார்.
ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ அதுபோல்தான் கவர்னர் பதவியும் என்பது எங்களது கொள்கை. கவர்னர் ஆர்.என்.ரவி பேசுவதை பெரிதுபடுத்த தேவையில்லை. அவர் ஒரு அதிகாரி தான். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசை குறை கூறாமல் இழப்பீடு பெற்று வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை.
ஆட்சியில் இருக்கும் போது இருவரும் அதிகாரத்துடன் செயல்படுகின்றனர். திமுகவை வீழ்த்த கூட்டணியால் தான் முடியும். திமுகவை வீழ்த்த யாருடனும் கூட்டணி வைக்க தயார். கூட்டணியின் தலைமை குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்து கொள்வோம். எனவே ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி வைக்க வேண்டும் என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.