நோயாளியைக் காப்பாற்ற மூன்று கிலோமீட்டர் தூரத்தை, 45 நிமிடங்களில் கடந்த மருத்துவரின் காணொலி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு நகரம் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிக்கது. அங்கே சாலையில் கொஞ்ச தூரம் வாகனத்தில் கடக்க வேண்டும் என்றாலும் அதிக நேரம் எடுக்கும். இப்படியான நகரத்தில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் குடல் மற்றும் இரைப்பை மருத்துவராகப் டாக்டர் கோவிந்த் நந்தகுமார் என்பவர் பணிபுரிகிறார்.
அவர் பணிபுரியும் மருத்துவமனையில் நீண்ட நாள்களாக பித்தப்பை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. அதனால், டாக்டர் கோவிந்த் நந்தகுமார் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி அவசரமாக அந்த அறுவை சிகிச்சையைச் செய்ய தனது காரில் சென்று கொண்டிருந்தார். இயல்பாகவே போக்குவரத்து நெரிசல் கொண்ட பெங்களூர், சில வாரங்களாகப் பெய்த கனமழையால் கூடுதல் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது.
இந்த நெரிசலால், மருத்துவமனை செல்ல தாமதமானால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்தப் பெண் நோயாளிக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தார். ஆகவே, நோயாளியைக் காப்பற்ற உடனடியாக ஒரு முடிவை அவர் எடுத்தார். அதன்படி, தனது காரை விட்டு இறங்கி மருத்துவமனையை நோக்கி அவர் ஓடத் தொடங்கினார்.
.@SoumiEmd @CCellini @andersoncooper @WCMSurgery @nycHealthy @NYCRUNS https://t.co/54zt4H5SxY #runtowork @ManipalHealth #togetherstronger pic.twitter.com/21NYbZgraX
— Govind Nandakumar MD (@docgovind) September 12, 2022
டாக்டர் கோவிந்த் நந்தகுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தை, 45 நிமிடங்களில் ஓடி, மருத்துவமனையை அடைந்தார். சரியான நேரத்தில் அந்த அறுவை சிகிச்சையையும் சிறப்பாக செய்து முடித்து நோயாளியையும் பாதிப்பில் இருந்து அவர் மீட்டார்.
இவரின் ஓட்டம் குறித்த காணொலி ஒன்றை அவர் பதிவிட அது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி உள்ளது .