உலகின் இயற்கை வள ஆதாரங்கள் ஒவ்வொன்றும் போட்டி போட்டுக்கொண்டு மாசடைந்து வருகின்றன. அவைகளாக மாசடையவில்லை, மனிதர்களாகிய நாம் மாசுபடுத்தி வருகிறோம் என்றே கூறவேண்டும். அந்த வகையில் காற்று மாசுபாடு என்பது அதீத வேகத்தில் நடந்து வரும் ஒன்றாக உள்ளது.
2015ம் ஆண்டு பாரிஸ் நாட்டில் நடந்த மாநாட்டில், சுற்றுச்சூழல் மாசுபாட்டினைக் குறைக்க பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. பிளாஸ்டிக் பயன்பாட்டினைக் குறைக்கவும், உலகத்தின் வெப்பநிலையினை குறைக்கவும், கரியமில வாயுக்களின் அளவைக் கட்டுப்படுத்தவும், காடுகளின் பரப்பளவை அதிகப்படுத்தவும் பல்வேறு நாடுகளும் பலவிதமான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தப் போவதாய்க் கூறியிருந்தன.
இருப்பினும் மக்கள்தொகை பரவல், காடுகள் அழிப்பு, அதிக அளவு கரியமில வாயுக்கள் வெளியேறுதல் போன்றவை நடந்தவண்ணமே உள்ளது.
காற்று மாசுபாடு..
காற்று மாசுபாட்டிற்கு மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது பூமியின் மேற்பரப்பில் எரிக்கப்படும் குப்பைகள் மரங்கள் போன்றவைகளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுவாயுக்களும், வாகனப்புகையும் தான்.
இந்த செயல்களின் மூலம் கரியமில வாயுக்களோடு சேர்த்து பல்வேறு விதமான விஷ வாயுக்களும், பர்டிகுலேட் மேட்டர் (particulate matter PM) எனப்படும் நுண்துகள்களும் அதிக அளவு வெளியேறுகின்றன.
இதில், பர்டிகுலேட் மேட்டர் எனப்படும் நுண்துகள்கள் நமது உடலினுள் நுழைந்து பலவிதமான வியாதிகளை ஏற்படுத்துகின்றன. நுரையீரல்களில் தங்கும் இந்த நுண்துகள்கள் பல சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.
காற்று மாசுபாடானது இந்த பர்டிகுலேட் மேட்டர் எனப்படும் நுண் துகள்களின் அளவினைப் பொறுத்தே அளவிடப்படுகிறது. அதிக அளவு நுண்துகள்கள் இருக்குமிடம் வாழத் தகுதியற்ற இடமாக மாறுகிறது.
காற்று மாசுபாடு அதிகமுள்ள ஐந்து நாடுகள்..
வங்காளதேசம்:
உலகத்தின் மிக மாசுபட்ட நாடாக பங்களாதேஷ் உள்ளது. அதிக மக்கள்தொகைப் பரவலும், குறுகிய இடத்தில் ஏற்படும் மிகுதியான வாகன நெரிசலும் நாடு முழுவதும் காணப்படுகின்றது.
பர்டிகுலேட் மேட்டரின் (PM 2.5) அளவு 77.10 சதவீதமாக உள்ளது. இந்த அளவு 2018ம் ஆண்டு 97.10 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வங்காளதேசத்தின் இந்த அளவு மாசுபாட்டிற்கு காரணமாக அந்நாட்டின் செங்கல் உற்பத்தி உள்ளது.
செங்கல் உற்பத்திக்காக இங்கு எரிக்கப்படும் மரங்கள், எரிபொருட்கள் அதிக அளவு நுண் துகள்கள் வெளியாக காரணமாக உள்ளது.
செங்கல் தயாரிப்பில் மட்டும் பத்து லட்சத்திற்கும் மேலான மக்கள் ஈடுபடுகின்றனர். ஒரு வருடத்திற்கு 23 பில்லியன் அளவு செங்கல் தயாரிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான்:
அதிக அளவு காற்று மாசுபட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இரண்டாவது நாடாக பாகிஸ்தான் உள்ளது. நுண் துகள்களின் (PM 2.5) அளவு 59.00 சதவீதமாக உள்ளது. 2019ம் ஆண்டு காற்று மாசுபாட்டின் அளவு இங்கு மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் நிலவும் காற்று மாசுபாட்டிற்கு அந்த நாட்டு அரசு இந்தியாவினைக் குற்றம் சாட்டி வருகிறது. எனினும் அந்நாட்டு மக்கள், காற்று மாசுபாட்டினை அளவிடுவதற்கான எந்த நடவடிக்கையினையும் மேற்கொள்ளாததற்காக அரசிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா:
மூன்றாவது இடத்தில் இந்தியா அதிக மாசுபட்ட நாடாக உள்ளது. சராசரி நுண்துகள்களின் அளவு (PM 2.5) 51.90 சதவீதமாக உள்ளது. உலகின் மிக அதிகமாக மாசுபட்ட முதல் 30 நகரங்களில் 21 நகரங்கள் இந்தியாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கான்பூரில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு ஒவ்வொரு மாதமும் சுவாசப் பிரச்சனை தொடர்பாக 600 நோயாளிகள் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் ஏற்படும் அதிக காற்று மாசுபாடு காரணமாக நாட்டின் தலைநகரம் டெல்லி அதிகம் பாதிக்கப்படுகின்றது. இங்கு ஏற்படும் காற்று மாசுபாட்டினால் அடிக்கடி விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றது. பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது.
சுற்றுப்புறம் முழுவதும் நடக்கும் இந்த மாசுபாடு காரணமாக டெல்லிக்கு அருகில் உள்ள தாஜ்மகால் தனது வெள்ளை நிறத்தினை இழந்து மஞ்சள் நிறத்திற்கு மாறிவருவது குறிப்பிடத்தக்கது.
மங்கோலியா:
மங்கோலியாவில் நுண் துகள்களின் அளவு 46.60 சதவீதமாக உள்ளது. அதிக அளவு நிலக்கரி எரித்தல் இங்கு ஏற்படும் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இந்நாட்டின் தலைநகரம் உளன் படோரில் கடந்த பத்து ஆண்டுகளில் 270 சதவீதம் சுவாசம் தொடர்பான நோய்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான்:
இந்த பட்டியலில் கடைசியாக இடம்பெற்றுள்ள நாடு ஆப்கானிஸ்தான். நுண்துகள்களின் அளவு இந்த நாட்டில் 46.50 சதவீதமாக உள்ளது. 2017ம் ஆண்டு நடந்த போரின் போது இங்கு காற்று மாசுபாடு மிகவும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டது.
26,000க்கும் அதிகமான மக்கள் அந்த வருடம் சுவாசம் தொடர்பான நோயினால் தங்களது உயிரினை இழந்தனர்.
இந்த ஐந்து நாடுகள் மட்டுல்லாது உலகின் பல நாடுகளும் காற்று மாசுபாட்டினால் திணறி வருகின்றன. நெருக்கடி மிகுந்த நகரங்களில் காற்று மாசுபாட்டின் அளவானது வருடம் முழுவதும் அதிகமாக உள்ளது.
மாசுபாட்டின் அளவைக் குறைக்க தங்களால் முயன்ற நடவடிக்கைகளை ஒவ்வொரு நாட்டின் அரசும் மேற்கொண்டு வருகின்றன.
இருப்பினும் மாறி வரும் பருவச்சூழல், அதிகமாக நிகழும் காட்டுத்தீ போன்ற இயற்கை நிகழ்வுகளும் காற்றின் மாசுபாட்டு அளவினை அதிகரித்து வருகின்றன. அனைத்தும் கைமீறி செல்வதற்குள் இந்த புவியினை ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதே பலரின் எண்ணமாக உள்ளது.
வெள்ளை நிற குழந்தை பிறந்தால், மரண தண்டனை! – வினோதத்தின் உச்சம்!