திரையரங்கு உரிமையாளர்களை பொறுத்தவரை விஜய், அஜித்துக்கு எந்தவிதமான வித்தியாசத்தையும் பார்க்கமாட்டார்கள் என திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமானது வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
வாரிசு வெளியாகும் பொங்கல் திருநாளன்று அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் வெளியாகவுள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.
பொங்கல் நெருங்கிக் கொண்டே வர, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வெளியிடும் துணிவு திரைப்படம் தமிழகத்தில் அதிகளவிலான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. அதன்படி, கிட்டத்தட்ட 600-க்கும் மேலான திரையரங்குகளில் துணிவு வெளியாகும் என்றும், வாரிசு 400 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்தது.
இதைத்தொடர்ந்து, வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ “அஜித்துடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் விஜய்தான் நம்பர்.1 இடத்தில் இருக்கிறார். ஆனால், வாரிசு படத்திற்கு குறைவான திரைகளே ஒதுக்கப்பட்டுள்ளன. இது வியாபாரம். நான் சென்னைக்கு சென்று உதயநிதியை சந்தித்து கூடுதல் திரைகள் குறித்துப் பேசப்போகிறேன்’ என நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.
தில் ராஜூ இப்படி தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக திரைப்பட உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் இது குறித்து மனம் திறந்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், ஹைதராபாத்தில் அமர்ந்துகொண்டு தில் ராஜு எதனடிப்படையில் இப்படி பேசுகிறார் என்பது எனக்கு புரியவில்லை. ‘துணிவு’ படத்தை ரெட் ஜெயன்ட் வெளியிட்டாலும் தமிழ்நாட்டில் இன்னும் ஒரேயொரு தியேட்டரைக்கூட கன்ஃபார்ம் செய்யவில்லை.
எந்த எண்ணிக்கையின் அடிப்படையில், இந்தக் குற்றச்சாட்டை தில் ராஜு வைக்கிறார் என்பதும் தெரியவில்லை. ஒரு யூகத்தில்தான், தில் ராஜு இப்படி பேசுகிறார். மேலும், திரையரங்கு உரிமையாளர்களை பொறுத்தவரை விஜய், அஜித்துக்கு எந்தவிதமான வித்தியாசத்தையும் பார்க்கமாட்டார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புரோ கபடி லீக்: இன்று நடைபெறுகிறது இறுதிப்போட்டி…