திருமலை திருப்பதி தேவஸ்தானம் பத்தாயிரம் கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகளை வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக திருப்பதி எழுலையான் கோயில் உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் திருப்பதிக்கு வருகைத்தருகின்றனர். மேலும், உலகின் பணக்கார கடவுள் என்று திருப்பதி எழுமலையான் அழைக்கப்படுகிறார்.
இப்படியான சூழலில், திருப்பதி திருமலையின் வருமானங்கள் ஆந்திர அரசின் பாண்டுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இதனால், பக்தர்கள் பலரும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் தன் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் பல்வேறு விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பணம் டெபாசிட் குறித்த விஷயங்கள் அனைவரையும் வியப்படைய செய்திருக்கிறது. அந்த அறிக்கையின்படி, கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.5,358 கோடியே 11 லட்சம், யூனியன் வங்கியில் ரூ.1,694 கோடியே 25 லட்சம், பாங்க் ஆஃப் பரோடாவில் ரூ.1,839 கோடியே 36 லட்சம், எச்டிஎஃப்சி வங்கியில் ரூ.2,122 கோடியே 85 லட்சம், கனரா வங்கியில் ரூ.1,351 கோடி என 24 வங்கிகளில் திருப்பதி தேவஸ்தானம் உண்டியல் மூலம் வரும் பணத்தை டெபாசிட் செய்துள்ளது.
மேலும், பக்தர்கள் வழங்கும் தங்க நகைகளை உருக்கி, 24 காரட் தங்கமாக மாற்றி, பின்னர் அதனை அதிக வட்டி விகிதம் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்கிறது. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி நிலவரப்படி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 9,819.38 கிலோ தங்கமும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 438.99 கிலோ தங்கமும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டீ, காபி பிரியர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்; ஆவின் பால் விலை உயர்வால் அடுத்த அவஸ்தை