மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க ஜனவரி 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை டிசம்பர் 31-க்குள் இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்னும் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் பயனீட்டாளர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியிருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க ஜனவரி 31 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஜனவரி 31 ஆம் தேதிக்கு பிறகு, மீண்டும் கால நீட்டிப்பு இருக்கும் என இருந்துவிடாமல், இந்த நாட்களை பயன்படுத்தி மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணியை நிறைவு செய்யும்படி கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் 2, 811 பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாளை புத்தாண்டு என்பதால் சிறப்பு முகாம் நடைபெறாது என்றும், இதுவரை மொத்தமாக 1.61 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் மீண்டும் நடைபெறுமா?