முகநூல் மூலமாக பழகி இளைஞரை 9-வது திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே இருக்கும் வாணியம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவருக்கு வயது 24. இவர் கரும்பு வெட்டும் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், கடந்த ஆண்டு முகநூலில் 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் தன்னை முகநூல் கணக்கில் இணைத்துக்கொண்டதாகவும், அவர் வேலூர் மாவட்டம் விருதம்பட்டு ஒட்டைபிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி என்றும் தான் ஒரு அநாதை என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தன்னை பிடித்திருப்பதால் நண்பராக பேச செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டதாகவும், பிறகு காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்ள அப்பெண் தெரிவித்தாகவும் அருள்ராஜ் தெரிவித்துள்ளார்.
உடனே அருள்ராஜ் இதுகுறித்து தனது பெற்றோரிடம் சம்மதம் வாங்கி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தேதி திருவதிகையில் இருக்கும் ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் முடிந்த பிறகு 4 மாதங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், மகாலட்சுமி திடீரென ஒருநாள் தனது பள்ளி தோழிக்கு உடல்நிலை சரியில்லை எனவும், அதனால் சென்னைக்கு சென்று அவரை பார்த்து வருவதாக கூறி சென்றதாகவும் அருள்ராஜ் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் அருள்ராஜ் வீட்டில் இருந்த ஆறரை பவுன் நகை மற்றும் 83 ஆயிரம் ரூபாயையும் எடுத்து சென்ற அந்தப்பெண் மீண்டும் வரவில்லை. அதோடு அருள்ராஜ் தொடர்புகொண்டும் சரியாக பதில் கூறாமல் இணைப்பை துண்டித்துள்ளார்.
இதன்பின்பு அருள்ராஜ், மகாலட்சுமி கொடுத்த முகவரியில் விசாரித்த போது, அது போலியான முகவரி என்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, அந்தப்பெண் பலரை திருமணம் செய்து ஏமாற்றியதும் அந்த வகையில் அருள்ராஜ்ஜை 9-வது திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அருள்ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வள்ளி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
டெஸ்ட்டில் புஜரா புரியப்போகும் சாதனை; வாழ்த்திய பிரதமர் மோடி!