கேரள மூணாறு பகுதியில் நேற்று காலை வெப்பநிலை பூஜ்ஜியத்தை தொட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தின் மிகப் பிரபலமான சுற்றுலா பகுதிகளில் ஒன்று தான் மூணாறு. இங்கு பல நாடுகளில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். குளிரும் குதூகலமும் நிறைந்த இந்த மூணாறில் மூடுபனிகளுக்கு பஞ்சமில்லை.
அந்த வகையில் தற்போது டிசம்பர் மாத இறுதி நாட்களில் கடும் குளிர் காணப்படுகிறது. இதனிடையே நேற்று குளிர்காலத்தின் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகி உள்ளது.
மூணாறு, குண்டுமலா மற்றும் தேவிகுளம் லக்கட் பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை வெப்பநிலை பூஜ்ஜியத்தை தொட்டது. மேலும், மலை முகடுகளில் வெண்பனி மூடியிருந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதே சமயம், மூணாறுக்கு அருகே உள்ள பகுதிகளில் 4 டிகிரி செல்ஸியஸ் அளவிலும் செந்துவரை உள்ளிட்ட இடங்களில் 2 டிகிரி செல்ஸியஸ் அளவிலும் வெப்பநிலை பதிவாகியதாகக் கூறப்படுகிறது.
தொடரும் சர்ச்சை; மீண்டும் ஷாருக்கான் படத்திற்கு சர்ச்சை..