நாட்டின் முக்கிய நகரங்களில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய உயர்மட்ட மருத்துவக் குழுக்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றுள்ளன.
மராட்டியம், கேரளம், குஜராத், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தட்டம்மை பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக மும்பை, மலப்புரம், அகமதாபாத், ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் குழந்தைகளுக்கு இந்த தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தப் பகுதிகளுக்கு மத்திய அரசு நேற்று (நவம்பர் 23) உயர்மட்ட மருத்துவ குழுக்களை அனுப்பியது.
மராட்டிய மாநிலம், மும்பையில் 8 மாத குழந்தை உயிர் இழந்ததை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தட்டம்மை நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் மட்டும் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 233 என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தற்போது மத்திய அரசு அனுப்பிய உயர்மட்ட மருத்துவ குழுக்கள் சம்பவ இடங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிடுவதோடு, நோய் பரவல் பற்றிய ஆய்வு பணிகளையும் செய்யும். மேலும், மாநில சுகாதாரத் துறைகளுடன் இணைந்து பணியாற்றி பொது சுகாதாரம், மேலாண்மை வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஒழுங்கு முறைகள் ஆகியவற்றுக்கு வேண்டிய உதவிகளை செய்யும்.