தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்துக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தற்காலிக தடை விதித்தது. முழுமையான வழிகாட்டுதலும், விதிமுறைகளுமின்றி தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை குறிப்பிட்டிருந்தது.
இதனை அடுத்து இன்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்துக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அரசுப்பள்ளிகளில் உள்ள 13,331 காலி இடங்களை நிரப்ப தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருந்தது.
ஆனால் தற்காலிக ஆசிரியர்களை, அரசுப்பள்ளிகளில் உள்ள நிர்வாகக் குழுவே தேர்ந்தெடுக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இது பள்ளி நிர்வாகிகள் தங்களுக்கு விருப்பமுள்ளோரை ஆசிரியராக நியமனம் செய்துகொள்ள வழிவகுக்கும் என்று புகார்கள் எழுந்தது.
இதனை அடுத்து, தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்துக்கு தடை பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த மனுவினை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்துக்கு, தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டது.
இதனிடையில். தற்போது புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, முறையான கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு பள்ளிகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை அந்தந்த பள்ளிகளின் அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்தவர்கள் மட்டும் வரும் நான்காம் தேதி முதல் ஆறாம் தேதி மாலை ஐந்து மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழிகாட்டு நெறிமுறையில் ஆசிரியரின் பணி திருப்தியளிக்கவில்லை எனில் உடனடியாக பணியிடைநீக்கம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்திருந்த தற்காலிக தடையினை அடுத்து தற்போது பள்ளிக் கல்வித்துறை இந்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு ரூ.13,834 கடன் தரும் உலக வங்கி