தமிழக அரசுப்பள்ளிகளில் உள்ள 13,331 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியராகப் பணியாற்ற விருப்பமுள்ளோர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்புவதற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, தற்காலிக தடை விதித்து ஜூலை மாதம் ஒன்றாம் தேதி உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவினை அடுத்து, மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகள் அடங்கிய புதிய அறிவிப்பினை கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.
கல்வித்தகுதி உள்ளவர்கள் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம், தற்காலிக ஆசிரியர்கள் திருப்திகரமான முறையில் பணியில் ஈடுபடவில்லை எனில் அவர்களை பணியிடைநீக்கம் செய்துகொள்ளலாம் போன்ற அறிவிப்புகள் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
மேலும், தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஜூலை 4-தேதி முதல் ஜூலை ஆறாம் தேதி மாலை ஐந்து மணிவரை விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, ஜூலை நான்காம் தேதியான இன்று முதல் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மேலும், ஜூலை ஒன்றாம் தேதி வரை காலியாகவுள்ள பணியிடங்களை மட்டுமே நிரப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
பணிக்கு விருப்பமுள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகளிடம் இன்று (ஜூலை 4) முதல் சமர்ப்பிக்கலாம். அவற்றினை மாவட்ட அதிகாரிகள் தொகுத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தற்காலிக பணிநியமனத்துக்கான அறிவுறுத்தல்கள்:
இடைநிலை ஆசிரியர் பணிக்கு டெட் முதல்தாள் தேர்விலும், பட்டதாரி ஆசிரியருக்கு டெட் இரண்டாம் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்புடன் பி.எட்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஒரு பணியிடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தால் முன்னுரிமைப்படி பரிசீலிக்க வேண்டும்.
முதுநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்கள் அல்லது பள்ளி அருகே அமைந்துள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இதில் தகுதிபெரும் பட்டதாரிகளை வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வைத்து அவர்கள் திறனறிந்து பின்னர் பணிநியமனம் செய்யவேண்டும். இந்த பணியியானது தற்காலிகமானது, பணி நடத்தையில் திருப்தி இல்லையெனில் உடனடியாக விடுவிக்கப்படுவர் என பட்டதாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
பணிநியமனத்துக்கான வழிகாட்டுதலின் மேல் புகார்கள் எழாத வண்ணம் பூர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.