தெலுங்கானா மாநிலத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்காமல், முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இன்றும் நாளையும் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பேகம்பேட் நிலையம் வந்துள்ளார்.
அப்போது அவரை வரவேற்க தெலுங்கனா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் செல்லவில்லை. இதற்கு மாறாக, ஒரு அமைச்சருடன் அதிகாரிகள் சென்று அவரை வரவேற்றனர். இதன்காரணமாக கடந்த 6 மாதங்களில் 3-வது முறையாக பிரதமரை வரவேற்பதை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, பிரதமர் மோடி வருவதற்கு ஓரிரு மணி நேரங்களுக்கு முன்னதாக அதே விமான நிலையத்தில் வந்திறங்கிய எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை முதல்வர் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றுள்ளார். சமீபத்தில் சந்திரசேகர் ராவ் எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தெலுங்கானா முதல்வரை சந்தித்து ஆதரவு கோருவதற்காக யஷ்வந்த் சின்ஹா வந்துள்ளார். இதனிடையே, பாஜக செயற்குழு கூட்டத்துக்காக வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்க அக்கட்சி நிர்வாகிகள் வைத்துள்ள பேனர்களுக்கு இணையாக, யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்று டிஆர்எஸ் கட்சியினர் பேனர்கள் வைத்துள்ளனர்.