தமிழகத்தில் தொடர்ந்து கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நிலவுகின்ற வெப்பத்தில் இருந்து தப்பிக்க, மக்கள் பல முன்னெடுப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். ஆனாலும், வெப்பம் வாட்டி வதைப்பதின் கொடுமையை மக்கள் முகத்தில் எளிதாக காணமுடிகிறது.
மழையும், குறைவான வெப்பநிலையும்தான் இதற்கு ஒரே தீர்வு என்ற எண்ணம் மக்களிடத்தில் உருவாகி வரும் இச்சமயத்தில், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சியாலும், வெப்பச்சலனத்தினாலும் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாயப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேப்போல், நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் வானிலை மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.