பெண்கள் தங்களின் கண்களை அழகாக்க பயன்படுத்தும் பொருள் ‘மை’. இந்த மை அந்த காலத்தில் வீட்டிலேயே செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது. குழந்தைகளுக்கும் அது சுத்தமானதாகவும் இயற்கையானதாகவும் இருந்தது. ஆனால், இப்போது நாம் அனைவரும் செயற்கையான மைகளைப் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையை மாற்றவே இந்த மை தாயாரிக்கும் குறிப்பு!
இந்த மையை குழந்தைகளுக்கு ஏற்றவாறு, பெண்களுக்கு ஏற்றவாறு என இரு வெவ்வேறு வகைகளில் தயாரிக்கலாம். வாருங்கள், தயாரிக்கும் முறையைப் பார்ப்போம்!
தேவையான பொருட்கள்:
- விளக்கெண்ணெய்
- நல்லெண்ணெய்
- நெய்
- பாதம்
- ஒரு தட்டு
- மூன்று டம்ளர்
- மூன்று விளக்கு
- மூன்று திரி
செய்முறை:
- முதலில் எப்போதும் போல் விளக்குகளில் நன்கு சுத்தமான தடித்த திரிகளை போட வேண்டும்.
- பின்பு மூன்று விளக்குகளிலும் தனித்தனியே ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். பின்பு விளக்கை ஏற்ற வேண்டும்.
- மூன்று விளக்குகளையும் முக்கோணம் வடிவாக வைத்து அதனிடையே டம்ளர்களை கவிழ்த்து வைக்க வேண்டும்.
- பின், அந்த டம்ளர்களின் மேல் சரியான அளவு தட்டினை வைக்க வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை அதை அப்படியே வைக்க வேண்டும்.
- ஒரு பாதாம் எடுத்து அதை தீயினில் சுட்டு கருக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து, சுட்ட பாதாமை நன்றாக இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 10 நிமிடங்கள் கழித்து தட்டினை கனத்த துணியால் அல்லது இடுக்கியால் தனியே எடுத்து வைத்து ஆற வைக்க வேண்டும். ஆறியவுடன் தட்டில் படிந்துள்ள கருப்பு துகள்களை தேக்கரண்டியால் உரசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இந்த பொடியுடன் நாம் முன்பே செய்து வைத்த சுட்ட பாதாமின் பொடியையும் சேர்த்துக் கலந்துக் கொள்ள வேண்டும்.
- தண்ணீர் இல்லாத ஒரு சின்னக் கண்ணாடி குவளை அல்லது சின்னக் குடுவையை எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அதில், ஒரு தேக்கரண்டி கருப்பு பொடியையும், சிறிது விளக்கு எண்ணெய்யையும் சேர்த்து நன்றாக கலந்தால், தண்ணீர் பட்டும் கலையாத கண் ‘மை’ தயார்.
- குழந்தைகளுக்கான மை செய்ய, ஒரு குடுவையில் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி கருப்பு பொடியினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளலாம். குழைந்தைகளுக்கான தண்ணீர் பட்டால் அழியும் மையாக இதைப் பயன்படுத்தலாம். இந்த மையை ஒரு மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.
இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.