தமிழகத்தில் சமீப காலமாக ‘ப்ராங்க்’ காணொலி மிகவும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. பல வித யூடியூப் சேனல்களும், யூடியூபர்களும் இந்த ‘ப்ராங்க்’ என்ற கான்செப்டை தன் கையில் எடுத்துள்ளன. மேலும், பல நேரங்களில் இந்த ப்ராங்க் காணொலியானது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.
இதைத் தொடர்ந்து, பல இடங்களில் ப்ராங் காணொலி எடுப்பதற்காக விதிமுறைகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக, சென்னையில் ப்ராங்க் காணொலிகளை எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்தனர். இதனால் இம்மாதிரியான யூடியூபர்களின் இம்சைகள் சற்று குறைந்துள்ளது.
இந்நிலையில், தற்போது கோவை காவல்துறை ப்ராங்க் காணொலி எடுப்பது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், கோவை மாநகரில் எவரேனும் காணொலி எடுக்கும் போது பொதுமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் அவர்களது இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்கும் வகையில் நடந்து கொண்டாலோ அல்லது அது பற்றிய புகார் வந்தாலோ உடனடியாக சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்படுவதுடன் அவரது சேனலும் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புகார் தெரிவிக்கப்பட்ட நபர்களின் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பிற சிறப்பு சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்கு தொடரப்பட்டு கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுவதாகவும் காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வார்டுக்குள் நுழைந்த யானைகள் ! அலறிய நோயாளிகள்… வைரல் வீடியோ