தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தை மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் மாநில சுகாதாரப் பேரவை செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், உலக அளவில் தென்கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்தச் சுகாதார பேரவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் 2 சவீதம் ரேண்டம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் தினமும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாகவும், இதன் காரணமாக சில நடைமுறைகளை மீண்டும் பின்பற்றப்பட வேண்டி இருப்பதாகவும் கூறிய அமைச்சர், அதன் அடிப்படையில் தான் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் அனைவரும் 100 சதவீதம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் பதற்றம் அடைய வேண்டிய அளவுக்கு பாதிப்பு உள்ளதாக அர்த்தம் இல்லை எனவும், நம்மை தற்காத்துக் கொள்வது அவசியம் எனவும், முதலில் மருத்துவமனைகளில் இருந்து முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு