பாடலாசிரியர் சினேகன் மீதான வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாடலாசிரியர் சினேகன் ‘சினேகம் பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது திரைப்பட பாடலாசிரியர் சினேகன் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, தன்னையும் தனது அறக்கட்டளையும் அவதூறாக பேசி விளம்பரம் தேடி வருவதாக நடிகை ஜெயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இருவரும் மாறிமாறி ஒருவர் மீது ஒருவர் புகாரளித்ததால், சைபர் கிரைம் காவல்துறை இருவரையும் விசாரணைக்கு அழைத்து சமரசம் பேசி அனுப்பிவைத்தனர்.
ஆனால், அதன்பின் நடிகை ஜெயலட்சுமி, திரைப்பட பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து, சினேகன் தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கானது நேற்று நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த அவர், சினேகன் மீதான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை விதித்து, விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: பூங்காவை பாதுகாக்க மன்னர் சார்லஸ் ஏற்றுள்ள புதிய பொறுப்பு