பரங்கிமலை ரயில் நிலையத்தை விரைவு ரயில், பறக்கும் ரயில், தாம்பரம் மார்க்கமாகச் செல்லும் ரயில், மெட்ரோ ரயில் போன்றவற்றை இணைக்கும் முனையமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது
சென்னை போக்குவரத்து சேவைகளில் முக்கியமானது, ரயில் சேவை. இந்த ரயில் சேவையில், பறக்கும் ரயில் திட்டம் முக்கியமானதாக முடிவெடுக்கப்பட்டு, அத்திட்டத்தை செயல்படுத்த கடந்த 1985-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை 3 கட்டங்களாக இத்திட்டத்தை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது. முதல் (சென்னை கடற்கரை – மயிலாப்பூர்) மற்றும் இரண்டாம் (மயிலாப்பூர் – வேளச்சேரி) கட்ட பறக்கும் ரயில் திட்டமானது நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மூன்றாம் கட்டமாக வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் அமைக்கும் திட்டம் கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மொத்தம் உள்ள 5 கி.மீ. தூரத்தில் 4.5 கி.மீ. தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது.
பின்னர், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு இந்த பிரச்சினை முடிவுக்கு வர மீதமுள்ள 500 மீட்டருக்கான ரயில் பாதை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த பணி வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பரங்கிமலை ரயில் நிலையத்தை விரைவு ரயில், பறக்கும் ரயில், தாம்பரம் மார்க்கமாகச் செல்லும் ரயில், மெட்ரோ ரயில் போன்றவற்றை இணைக்கும் முனையமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்படி பரங்கிமலை ரயில் நிலையம் உருவாக்கப்படுமாயின், சென்னை சென்ட்ரல் போலவே பரங்கிலையும் செயல்படுமென கூறப்படுகிறது.
வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டி; ஷமி விலகலா? பதிலுக்கு யார்?