ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் விமானப் பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் தவறாக நடந்து கொண்டதாக கூறி விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே விமான கோளாறுகளும் விமானத்தில் நடந்து வரும் சில சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தில்லியில் இருந்து ஐதராபாத்துக்கு சென்ற விமானம் ஒன்றில், விமானம் புறப்படத் தயாராக இருந்தபோது, அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த முதியவர் ஒருவர் தவறான இடத்தில விமானப் பணிப்பெண்ணை தொட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கோபம் அடைந்த அந்த விமானப் பணிப்பெண் அந்த முதியவரிடம் வாக்குவாதம் செய்தார். அவரும் பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட, தவறுதலாக பட்டுவிட்டதாகவும், வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் அந்த முதியவர் தெரிவித்துள்ளார்.
இருவரிடையே தொடர்ந்து வாக்குவாதம் அதிகமாக, விமான ஊழியர்களும் விமானப் பயணிகளும் அவர்கள் இருவரையும் விலக்கிவிட்டனர். இதைத்தொடர்ந்து, முதியவர் மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதினார். பிறகு முதியவரும் அவருடன் வந்த நபரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் விமானம், தில்லி-ஐதராபாத் விமானத்தில் விமானக் குழு ஊழியர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையிலும் தவறாகவும் ஒரு பயணி நடந்து கொண்டார் என்று தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து பொறுப்பு விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், இதையடுத்து அவர் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வெறும் வாயில் வடை சுடும் அண்ணாமலை! போட்டிக்கு அழைக்கும் மாணிக்கம் தாகூர்