கள்ளக்குறிச்சியின் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஶ்ரீமதி கடந்த 13-ம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பள்ளித்தரப்பில், மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார், தமது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று காணொளி ஒன்றில் தெரிவித்தார். இதுகுறித்து காவல்நிலையத்தில் ஸ்ரீமதி பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி காலை மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததற்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் பள்ளி அருகே சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மறியல் நடைபெற்ற இடத்தில் குவிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை கூடியது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. அந்நேரத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்பை மீறி பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தனர்.
இதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென காவல் துறையினர் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் காவல்துறையினர் பலர் காயம் அடைந்தனர். மேலும், அங்கிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளிக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த கணினிகள், நாற்காலிகள், ஆவணங்களுக்கும் தீ வைத்தனர்.
இந்த வன்முறையை கட்டுப்படுத்த, சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதலாக 500 அதிரடிப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை பெரும் போராட்டத்துக்கு பிறகு அதிரடிப்படையினர் கலைத்தனர். மேலும், பள்ளி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் காவல்துறையினர் கொண்டு வந்தனர்.
இந்த வன்முறைச் சம்பவத்தில் காவல்துறையினர் பலருக்கு காயங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேனியின் காவல் துணை ஆணையாராக இருந்த பகலவன் தற்போது கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு செய்யப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக உள்துறை செயலளார் பணீந்திர ரெட்டி அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார் தற்போது காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியராக ஸ்ரவன்குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி வன்முறைக்கு சமூக வலைதளம் காரணமா?