ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய படை வீரர்கள் வருகை தந்தனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈ.வெ.ரா கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 18 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31 ஆம் தேதி முதல் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் சிவபிரசாந்த் உள்பட 96 பேர் வேட்பு மனுக்களை செய்தனர்.
வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நேற்றோடு முடிவடைந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
77 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா என மொத்தம் 78 பெயர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டி இருப்பதால், ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு 16 வேட்பாளர்கள் என்ற கணக்கின்படி, 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடிக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய படை வீரர்கள் ஈரோட்டிருக்கு வருகை தந்துள்ளனர். அதன்படி, மத்திய தொழில் பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை என மொத்தம் 180 வீரர்கள் ஈரோடு வந்துள்ளனர்.
சேலத்தில் கொடூரம்; ரத்த வெள்ளத்தில் மிதந்த காவலாளி