சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களின் துரோகம் வேதனையளிப்பதாக அக்கட்சியின் தலைவரும் மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சிவசேனா கட்சியிலிருந்து விலகி பாஜகவுக்கு ஆதரவு அளித்தார். இதனால் பெரும்பான்மையை இழந்த சிவசேனா கட்சி ஆட்சியை இழந்தது. ஷிண்டேவின் கூட்டணி காரணமாக பெரும்பான்மை பெற்ற பாஜக ஆட்சி அமைத்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார்.
திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷிண்டேவின் அரசு பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, காலம்நூரி பகுதி எம்எல்ஏவான சந்தோஷ் பங்கர், ஷிண்டே அணிக்கு ஆதரவு அளித்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று ஹிங்கோலி பகுதி சிவசேனா தொண்டர்களுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், ‘கட்சித் தொண்டர்களால் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், பெரிய பொறுப்புகளை வகித்தவர்களும் கட்சிக்கு துரோகமிழைத்து வெளியேறியது வேதனையளிக்கிறது.
‘ஆனால், கட்சியில் பெரிய பொறுப்புகள் கிடைக்காதவர்கள் என்னுடனே உள்ளனர். இந்த போராட்டத்தில் வென்று சிவசேனாவுக்கு புத்துயிர் ஊட்டுவேன்.’
ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் அஸ்ஸாமில் முகாமிட்டிருந்தபோது காணொளி ஒன்றை வெளியிட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் சந்தோஷ் பங்கர், எம்எல்ஏக்கள் அனைவரும் மும்பைக்கு திரும்ப வேண்டுமெனவும், அவர்களை உத்தவ் தாக்கரே நிச்சயம் மன்னிப்பார் எனவும் தெரிவித்தார். இந்நிலையில் சந்தோஷ் பங்கர் பாஜகவுக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.