நடிகர் சங்கத்தில் இருந்து திடீரென பாக்யராஜ் நீக்கப்பட்டதையடுத்து, அவரது மகன் சாந்தனுவின் ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்தலில் பாக்யராஜ் தலைமயிலான சுவாமி சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன.
2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலின் வாக்குகள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் எண்ணப்பட்டன. அதன்படி நாசர் மற்றும் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி தேர்தலில் வெற்றி பெற்றது.
நடிகர் சங்க தலைவராக நாசர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாசர் அவர்கள் இத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நடிகர் பாக்யராஜ் அவர்களை 647 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். நாசர் அவர்கள் 1701 வாக்குகளும், பாக்யராஜ் அவர்கள் 1054 வாக்குகளும் பெற்றிருந்தார்.
அதேப்போல், நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட விஷால் அவர்களும், நடிகர் சங்க பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட கார்த்தி அவர்களும் மீண்டும் வெற்றி பெற்றனர். இதனிடையே நடிகர் சங்க நிர்வாகிகளின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் செயல்பட்டதாக பாக்யராஜ் மீது புகார் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இதுகுறித்து செயற்குழு கூடி, சங்க உறுப்பினர் பதவியில் இருந்து ஏன் உங்களை நீக்கக்கூடாது என்றும், இதற்காக 15 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறும் பாக்யராஜுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதேபோல் நடிகர் உதயாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது பாக்யராஜும், உதயாவும் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது.
😂🤣 எவ்வளவு கீழ இறங்க முடியுமோ அவ்வளவு இறங்கி பாக்குறீங்க … திருத்த முடியாது …
— ஷாந்தனு (@imKBRshanthnu) October 1, 2022
இதனால் ஆத்திரமடைந்த நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு, ட்விட்டரில், ‘எவ்வளவு கீழ இறங்க முடியுமோ அவ்வளவு இறங்கி பாக்குறீங்க … திருத்த முடியாது’ என ஒரு பதிவை போட்டிருந்தார். பாக்யராஜை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கிய நாசர், கார்த்தி, விஷால் ஆகியோர் மீதுள்ள கோபத்தில் தான் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் கதாபாத்திர பெயர் கொண்டவரா நீங்கள்? அப்போ உங்களுக்கு பிரியாணி 1 வாரத்திற்கு இலவசம்!