தமிழ்நாட்டில் நாளை தைப்பூசம் என்பதால், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் சிறப்பு முகாமை வேறு நாளிற்கு மாற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நாளை தைப்பூசம் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. அதேநேரத்தில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் சிறப்பு முகாமும் நாளை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், சிறப்பு முகாமை வேறு நாளிற்கு மாற்ற வேண்டும் என கூறி சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பாக மாவட்ட ஆட்சியர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனின் தைப்பூச திருவிழா தமிழ்நாட்டில் நாளை (05.02.2023) நடைபெறவுள்ள நிலையில், பெரும்பாலான பொதுமக்கள் நாளைய சிறப்பு முகாமில் கலந்துகொள்ள முடியாத நிலையே உள்ளது.
ஏற்கனவே தமிழர்களின் தனிப்பெரும் தேசியத் திருவிழாவாம் தைப்பொங்கல் நாளன்று வங்கித் தேர்வினை வைத்து தமிழ் மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ள முடியாத நெருக்கடியான சூழலை உருவாக்கியது இந்திய ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI). தற்போது, தேர்தல் ஆணையமும் அதுபோன்று ஒரு சூழலை அளித்து நெருக்கடி அளிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
ஆகவே, நாளை நடைபெறவுள்ள சிறப்பு முகாமை வேறு ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றி அறிவிக்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காதலியின் தாய்க்கு பயந்து மாடியில் இருந்து குதித்த காதலன் பலி