தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மருத்துவர்களை கண்டறியும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவர்களை கண்டறிய ‘Search for doctor app’ என்ற புதிய செயலியை கடந்த ஜூலை 24-ம் தேதி அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தச் செயலியில், அஞ்சல் குறியீட்டு எண் மற்றும் இருப்பிடப் பகுதியை வைத்து தேடினால் அந்த பகுதியில் உள்ள மருத்துவர்களின் பட்டியல் கிடைக்கும். மேலும், மருத்துவர்களின் அனுபவம், அவர்கள் எந்த துறையில் வல்லுனர் உள்ளிட்ட தகவல்களும் கிடைக்கும் வகையில் அந்தச் செயலியானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் அவசர காலங்களில் எளிமையாக மருத்துவர்களை கண்டறிய முடியும். இது போன்ற செயலி இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் செந்தில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் அதிகபட்சமாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் 1.60 லட்சம் பதிவு செய்யபட்ட மருத்துவர்கள் உள்ளனர். தற்போது வரை, இந்தச் செயலில் 80 ஆயிரம் மருத்துவர்கள் இணைந்துள்ளனர்.
மேலும், கொரோனா காலகட்டத்தில் நிறைய போலி மருத்துவர்கள் உருவாகிவிட்டனர். இந்தச் செயலி மூலம் சரியான மருத்துவர்களிடம் மக்கள் சிகிச்சை பெறுவதை உறுதி செய்ய முடியும்.
அதேபோல், மருந்துகளை பரிந்துரைக்கும் செயலி மற்றும் மருத்துவ சான்றிதழ் பெற உதவும் செயலி ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலியில், பயனாளிகளின் தகவல்கள் பாதுகாக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் செந்தில் தெரிவித்தார்.
நோயாளிகளின் தகவல்களை வெளியிட்டால் நடவடிக்கை