முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 30 வருடங்களுக்கும் மேல் சிறையில் இருந்த நளினி உட்பட 6 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி, தமிழத்தில் உள்ள ஶ்ரீபெரும்புதூரில் குண்டு வெடிப்பில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் யஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, தமிழக அரசு அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது. இதைத்தொடர்ந்து, ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, இந்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.
இதன்பிறகு, சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற ஆறு பேரில் ரவிச்சந்திரன், நளினி ஆகிய இருவரும் தங்களையும் இதே காரணத்திற்காக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், இந்த அதற்கான அதிகாரம் எங்களிடத்தில் இல்லை எனக்கூறி அந்த மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த ஜூன் 17-ஆம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகியோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆறு பேருக்கும், பேரறிவாளன் வழக்கில் அளித்த தீர்ப்பு பொருந்தும் என்பதால், அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது.
இதையும் படிங்க: பொது மக்கள் மத்தியில் 2 கி.மீ தூரம் நடந்தே சென்ற குடியரசு தலைவர் ! ஏன் தெரியுமா ?