நேற்று (ஜூலை 13) 105 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஜூலை 14) 110 அடியை தாண்டியுள்ளது.
தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து கடந்த 8-ம் தேதி முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2 நாள்களாகவே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 105.81 அடியாக இருந்தது. இதனிடையே காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கும் மேல் உயர்ந்து 110.14 அடியை தாண்டியுள்ளது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு 78.60 டிஎம்சியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 98.208 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் டெல்டா பாசனத்துக்காக 15,000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
மராட்டிய மாநில கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!