உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள லுஹான்ஸ் மாகாணத்தை ரஷ்யா முழுவதுமாக கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 132வது நாளாக போர் தொடுத்து வருகிறது. சில மாதங்களாக தொடர்ந்து வரும் இந்த போரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், உக்ரைனுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள லுஹான்ஸ் மாகாணம் முழுவதையும் கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள லுஹான்ஸ் மாகாணத்தில், உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான லிஸிசன்ஸ்க் நகரத்தையும் கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா நேற்று அறிவித்தது.
கடினமான போருக்குப் பிறகு லிஸிசன்ஸ்க் நகரத்தை விட்டு உக்ரைன் ராணுவம் பின்வாங்க உத்தரவிடப்பட்டதாக உக்ரைன் ராணுவ ஜெனரல் தெரிவித்துள்ளார்.
மேலும், பல விதமான போர் ஆயுதங்களும் ரஷ்யாவின் கையிருப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
லிஸிசன்ஸ்க் நகரத்தை ரஷ்யா கைப்பற்றிய பிறகு தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் உரையாடிய உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி, ராணுவ வீரர்களின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டே பின்வாங்க உத்தரவிடப்பட்டதாக கூறினார். மேலும், தங்களது ராணுவம் மீண்டும் லிஸிசன்ஸ்க் நகரை மீட்கும் எனக் கூறியுள்ளார்.
‘நமது பகுதிகளை மீண்டும் மீட்போம், நமது கட்டமைப்புகளை மீண்டும் உறுதிப்படுத்துவோம்; அதுவரை மக்களைப் பாதுகாப்பது முக்கியமானது.’ என்று தனது உரையில் செலென்ஸ்கி கூறியுள்ளார்.
நேற்று தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த லுஹான்ஸ் மாகாணத்தின் கவர்னர், தங்களது மாகாணத்தை முழுவதும் கைப்பற்றியுள்ள ரஷ்யா தனது கவனத்தை லுஹான்ஸ்-க்கு அருகில் இருக்கும் டொனேட்ஸ்க் மாகாணத்தின் மீது திருப்பலாம் என கூறியுள்ளார்.
2014ம் ஆண்டில் இருந்தே ரஷ்யா ஆதரவு அளித்து வரும் போராட்டக்காரர்களால் லுஹான்ஸ் மாகாணமும், டொனேட்ஸ்க் மாகாணமும் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதம் 2014ம் ஆண்டு டொனேட்ஸ்க் மாகாணத்தைக் கைப்பற்றிய கலவரக்காரர்கள் சுய ஆட்சி பெற்ற மாகாணமாக அறிவித்தனர். உக்ரைன் நாட்டை பொறுத்த வரை டொனேட்ஸ்க் மாகாணம் அதிக தொழிற்சாலைகள் இருக்கும் பகுதியாக உள்ளது.
‘ராணுவத்தைப் பொறுத்த வரை, தங்களுடைய இடத்தில் இருந்து பின் வாங்குவது என்பது கடினமான ஒன்று. ஆனால் லிஸிசன்ஸ்க் மாகாணத்தை விட்டு பின் வாங்கியது அவ்வளவு தீவிரமானது அல்ல. நங்கள் இந்த போரில் வெல்ல விரும்புகிறோம்; லிஸிசன்ஸ்க் மாகாணத்தை மட்டும் அல்ல.’ என லிஸிசன்ஸ்க் மாகாணத்தின் ஆளுநர் செரி கூறியுள்ளார்.
மேலும், ரஷ்யாவுக்கு லுஹான்ஸ் மாகாணத்தை கைப்பற்றுவதை விட டொனேட்ஸ்கை கைப்பற்றுவது தான் முக்கிய குறிக்கோளாக இருக்கும் என்றும் லிஸிசன்ஸ்க் மாகாணத்தின் ஆளுநர் செரி கூறியுள்ளார்.
2022ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின், டொனேட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் மாகாணங்களை தன்னாட்சி பெற்ற மாகாணமாக அறிவித்தார். இதனை அடுத்து ரஷ்யா ராணுவத்தினர் டொனேட்ஸ்க், லுஹான்ஸ் பகுதிகளில் குவிக்கப்பட்டனர்.
பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போரினை ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என ரஷ்யா அதிபர் புதின் கூறியது குறிப்பிடத்தக்கது.