சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை முதல் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. வீடுகளில் கொடி ஏற்றம், சமூக வலைத்தளங்களின் முகப்பு படமாக தேசியக் கொடி எனப் பல்வேறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் உள்ளிட்டவற்றை பார்வையாளர்கள் காண இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை முதல் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையத்துடன் இணைந்து, மதுரை கலைமாமணி தி.சோமசுந்தரம் குழுவினரின் பல்வேறு கிராமியக் கலை நிகழ்ச்சிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெறுகிறது.
இதில், சிலம்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், காளையாட்டம் போன்ற கிராமிய நிகழ்ச்சிகள், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடத்தப்பட உள்ளது.
நடைபெறும் நாள்கள் மற்றும் இடங்கள்:
- ஆகஸ்ட் 12 – சென்னை சென்ட்ரல் மெட்ரோ
- ஆகஸ்ட் 13 – விம்கோ நகர் மெட்ரோ
- ஆகஸ்ட் 14 – கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்
- ஆகஸ்ட் 15 – அசோக் நகர்
இவ்வாறு, சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு தீவிரம்