44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் வெற்றி பெற்ற இந்திய பி, இந்திய ஏ (மகளிர்) அணிகளுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்திய பி அணியும், மகளிர் பிரிவில் இந்திய ஏ அணியும் வெண்கலப் பதக்கங்களை வென்றன. இந்நிலையில், வெற்றிப் பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
வெற்றிப்பெற்ற இந்திய பி மற்றும் இந்திய ஏ அணி வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். பதக்கம் வென்ற குகேஷ், நிஹல் சரீன், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, வைஷாலி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோருக்கும் வாழ்த்துகள். இவர்கள் சிறப்பாக செயல்பட்டதோடு, உறுதியான திறமையையும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, தமிழில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக மக்களும், அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளனர். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்