வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா மனம் திறந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளது. இவற்றுள் நேற்று ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் டக்காவில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கில் களம் இறங்கியது. இந்திய அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கினர்.
தவான் 7 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, இதையடுத்து வந்த விராட் கோலியும் 9 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனிடையே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 27 ரன்களுக்கு அவுட் ஆனார். இதன் பின்பு வந்த இந்திய வீரர்கள் சொதப்பினர். இருப்பினும், கே.எல்.ராகுல் 73 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார்.
மொத்தத்தில், இந்திய அணி 41.2 ஓவர்களில் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதைத்தொடர்ந்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது.
அந்த அணியின் பேட்டிங் வீரர்களும் சொதப்பி வந்தனர். அதிகபட்சமாக வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் 41 ரன்கள் குவித்தார். இருப்பினும், இந்திய வீரர்களின் பந்துவீச்சால் 40 ஓவர்களில் 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.
ஆனால், ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் ஹசன் முஸ்டாஃபிஸுர் ரஹ்மான் ஆகியோரின் பார்டன்ர்ஷிப் 51 ரன்களை சேர்க்க, வங்கதேசம் 46 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் சேர்த்து வென்றது.
இந்நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா மனம் திறந்துள்ளார். அவர் பேசும்போது, இந்த ஆட்டத்தில் நூலிழையில் தோற்றுள்ளோம். நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. 186 என்பது நல்ல ஸ்கோர் கிடையாது. ஆனாலும் நாங்கள் நன்றாகப் பந்துவீசினோம் என்று தெரிவித்தார்.
மேலும், அவர் கூறியதாவது;
வங்கதேச அணியினர் கடைசி நேர நெருக்கடியைச் சரியாக எதிர்கொண்டார்கள். கடைசியில் நன்றாகப் பந்துவீசியிருக்க வேண்டும் என்றாலும் இந்த ஆட்டத்தில் எங்களுடைய பந்துவீச்சு 40 ஓவர்களுக்கு நன்றாக இருந்தது. நிறைய விக்கெட்டுகளையும் எடுத்தோம். நிறைய ரன்கள் எங்களிடம் இல்லை.
கூடுதலாக 25-30 ரன்கள் இருந்திருந்தால் உதவியாக இருந்திருக்கும். 25-வது ஓவரின்போது நாங்கள் 240-250 ரன்கள் எடுப்போம் என நினைத்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில் எப்படி விளையாட வேண்டும் எனக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த ஆடுகளங்களுக்கு நாங்கள் பழக்கப்பட்டு உள்ளதால் எவ்வித மன்னிப்பும் கிடையாது. எங்கள் அணி வீரர்கள் இந்த ஆட்டத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
விஜய் – லோகேஷ் இணையும் ‘தளபதி-67’ .. இன்று நடைபெற்ற அந்த கோலகலம்…