டென்னிஸ் விளையாட்டில் மிக முக்கியமான வீரர்களில் ஒருவரான ரோஜர் ஃபெடரர் தொழில்முறை டென்னிஸிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
லண்டனில் அடுத்த வாரம் நடைபெறும் லேவர் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில், ரோஜர் ஃபெடரர் பங்கேற்க உள்ளார். இந்தப் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த எதிர்பார்ப்புக்கு காரணம் இருக்கிறது. ஆம், ஃபெடரர் தனது வலது முழங்கால் காயத்துக்காக மேற்கொண்ட அடுத்தடுத்த அறுவைச் சிகிச்சைகள் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக அவரால் பெரிதாக டென்னிஸில் பங்கேற்க முடியாமல் போனது. இறுதியாக, கடந்த 2021 விம்பிள்டன் காலிறுதியில் தோற்ற பிறகு அவர் களம் காணவில்லை.
இதன்பிறகு, ஃபெடரர் பங்கேற்கும் போட்டி இதுவென்பதால் எதிர்பார்ப்பு இயல்பாகவே எழுந்தது. இந்நிலையில், சற்றும் எதிர்பாரா விதமாக, ஃபெடரர் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
இதையும் படிங்க: இந்திய அணியை திணறடித்து வெற்றி வாகை சூடிய இங்கிலாந்து
இதுதொடர்பாக அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
டென்னிஸிலிருந்து ஓய்வுபெறுவது கசப்பான முடிவுதான். என்றாலும், கடந்த 3 ஆண்டுகளாக காயங்கள், அறுவைச் சிகிச்சைகள் வாயிலாக நான் சந்தித்த சவால்கள் அனைவரும் அறிந்ததே.
மீண்டும் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் என்னை தயார்படுத்த கடுமையாக உழைத்தேன். ஆனால், எனது உடல்திறன் என்ன என்பது தற்போது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.
எனவே, எனது போட்டிக் காலத்தின் இறுதிக்கட்டத்தை நான் ஏற்றுக்கொண்டாக வேண்டும். வரலாற்றுச் சிறப்பு மிக்க பல ஆட்டங்களில் களம் கண்டது எனது அதிருஷ்டம். அதை மறக்க மாட்டேன். எனது கனவுக்கும் அப்பாற்பட்ட வகையில் டென்னிஸ் விளையாட்டு என்னை பெருந்தன்மையுடன் நடத்தியது. இந்த டென்னிஸ் காலகட்டத்தில் உடனிருந்த அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் தெரவித்திருந்தார்.