லக்னோ அருகே சின்ஹாட் பகுதியில் உள்ள ஒரு குடோனில் இருந்து 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேட்பரி சாக்லேட்டுகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். சின்ஹாட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாக்லெட் உற்பத்தியாளர் ஒருவர் தன் வீட்டை சாக்லேட் சேமிக்கும் குடோனாகப் பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை நள்ளிரவு குடோனில் இருந்த அத்தனை இனிப்புகளும் திருடப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனுவில், ராஜேந்திர சிங் சித் சாக்லேட்டுகளை சேமித்து வைப்பதற்கான குடோனாக தனது வீட்டை பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திங்கள் இரவு ராஜேந்திர சிங் சித் குடோனை விட்டு வெளியே சென்றுள்ளார். மறுநாள், வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக, பக்கத்து வீட்டிலிருந்து அழைப்பு வந்தது என்றும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், காவல்துறை, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 380-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
திருடர்கள் குடோனை காலி செய்துவிட்டு டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் மற்றும் சிசிடிவி பாதுகாப்பு கேமராக்களின் பிற உபகரணங்களை எடுத்துச் சென்றதாக விநியோகஸ்தர் கூறினார். போலீசார் விசாரணையை தொடங்கி, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மற்ற சிசிடிவி கேமராக்களில் உள்ள காட்சிகளை வைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, சாக்லேட்டை விநியோகிக்கும் ராஜேந்திர சிங் சித், ‘நாங்கள் சின்ஹாட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளோம். எவருக்கேனும் இந்த திருட்டுச் சம்பவம் குறித்து தெரிந்திருந்தால் தயவுசெய்து முன்வாருங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.