தஞ்சையில் கொட்டும் மழையிலும் பொதுமக்கள் ராஜராஜ சோழனின் சதய விழாவை கண்டு களித்தனர்.
தஞ்சை பெரிய கோயிலை எழுப்பி உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் மன்னர் ராஜராஜ சோழன். வருடா வருடம் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்த மாமன்னனின் பிறந்த நாள், வருடந்தோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழா நேற்றும் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சதய விழாவால் தஞ்சையே திருவிழாக்கோலம் பூண்டது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக தஞ்சை கோயிலும், ராஜராஜ சோழன் சிலையும் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. அத்தனை வண்ண மயங்களுக்கு நடுவிலும் நேற்று சதய விழா தொடங்கியது. இதற்காக கோயிலுக்குள் மிகப்பெரிய டென்ட் அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், தமிழகம் முழுவதும் பெய்து வரும் மழையில் தஞ்சையும் நனைந்தது. தொடர்ந்து மூன்று மணி நேர்த்திற்கு மேலும் தஞ்சையில் மழை பெய்தது. டென்ட் பகுதி முழுவதிலும் குளம் போல் காட்சியளித்தது.
இருப்பினும் கொட்டும் மழையிலும் பொதுமக்கள் சதய விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். இந்நிலையில், தற்போது ராஜராஜ சோழனின் சதய விழாவின் இரண்டாம் நாள் பெரிதளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
திருமுறை வீதி உலா, அரசியல் தலைவர்கள் ராஜராஜன் சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் போன்றவை நடைபெற்று வருகின்றன . மேலும், தஞ்சையில் உள்ள பெருவுடையாருக்கும், பெரிய நாயகிக்கும் 48 வகையான் பேராபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன . இதற்காக மக்கள் இன்றும் ஆர்வத்துடன் தஞ்சை கோயிலில் கூடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை மக்களுக்கு அடுத்த சிக்கல்.. “மெட்ராஸ் ஐ” பரவுகிறது.. இதிலிருந்து தப்பிப்பது எப்படி?