நாட்டின் கோடிக்கணக்கான மக்களை ஒற்றுமைப் படுத்துவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதை உணர்ந்து, இந்திய ஒற்றுமை பயணத்தை நேற்று தொடங்கிய ராகுல் காந்தி இரண்டாவது நாள் பயணத்தை அகஸ்தீஸ்வரத்தில் இருந்து இன்று தொடங்கியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்ரா எனும் இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கன்னியாகுமரியில் இருந்து நேற்று தொடங்கினார். காந்தி மண்டபத்தில் இருந்து தொடங்கிய இந்த யாத்திரையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களும், உடல் நலம் சரியில்லாத காரணத்தால் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதற்கு வருத்தம் தெரிவித்து பயணம் வெற்றியடைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.
இப்படி எல்லோரின் வாழ்த்துக்களையும் பெற்று தனது யாத்திரையை நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய ராகுல்காந்தி அங்கிருந்து கடற்கரை சாலை வழியாக சென்று அங்கு நடைபெற்ற பொதுக்குழுவிலும் கலந்துகொண்டு பேசினார்.
பொதுக்கூட்டம் முடிந்ததும் கார் மூலமாக அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்துக்கு சென்ற ராகுல்காந்தி, அங்குள்ள கேரவனில் ஓய்வெடுத்தார்.
அவருடன் பாதயாத்திரை சென்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளும் தனித்தனி கேரவன்களில் தங்கினர்.
இதனை தொடர்ந்து இன்று முதல் தினமும் ராகுல்காந்தி 25 கி.மீ. தூரம் வரை நடந்தே சென்று தன் யாத்திரையை மேற்கொள்ள உள்ளார். காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் பாதயாத்திரை இரண்டு ஷிப்டுகளாக தன் யாத்திரையை தொடர உள்ளாராம் ராகுல்காந்தி.
இதற்கு பிறகு 11-ந் தேதியில் இருந்து கேரள மாநிலத்தில் பாதயாத்திரையை மேற்கொள்கிறார்.
இந்த நிலையில் பாதயாத்திரையின் 2-வது நாளான இன்று அகஸ்தீஸ்வரத்தில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி பயணத்தை தொடங்வதற்கு முன்பு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.