திமுக நகரச் செயலாளர் இந்து முன்னணி கொடியை ஏந்தி ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்துள்ள நிகழ்வு திமுகவினுள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி திமுக நகர செயலாளரும் நகர் மன்ற உறுப்பினரும் நகர கூட்டுறவு வங்கித் தலைவருமான வி.எஸ். சாரதி குமார் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை தொடக்கி வைத்த புகைப்படத்தை வி.எஸ். சாரதி குமார் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அந்த கொடியில், ‘தர்மம் காக்க அதர்மம் அகற்ற, இந்து முன்னணி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புகைப்படத்தில் திமுக நகரச்செயலாளர் இந்து முன்னணி கட்சியின் கொடியை வைத்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திமுகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொள்கை ரீதியாக திமுக மற்றும் இந்து முன்னணி கட்சி இரு எதிரெதிர் துருவங்கள்.
இந்நிலையில், இந்நிகழ்வு குறித்து வி.எஸ்.சாரிதி குமார் தெரிவித்துள்ளதாவது:
முதலில் அது இந்து முன்னணி கொடியே இல்லை ,விநாயகர் சதூர்த்தி நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்த கொடி அது. இந்த விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் அரசியல் லாபத்துக்காக செய்கிற விஷயம் இல்லை. நான் வந்தால் அவர்களுக்கு ஒரு திருப்தி. மரியாதையாக கூப்பிட்டார்கள். சிலை புறப்படும்போது வந்து நில்லுங்கள் என்று சொன்னார்கள். ஒவ்வொரு முறையும் ஆளும் கட்சியில் இருப்பவரை அழைப்பார்கள்.
இந்த வருடம் திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் திமுக நகர செயலாளரான என்னை விழாக்குழு சார்பில் அழைத்தார்கள். அவ்வளவுதான். இதில் அரசியல் ஆதாயம் தேட சில முயற்சி செய்கிறார்கள். அது நடக்காது. இந்த சிறிய விஷயத்தை பொதுச் செயலாளர் அளவுக்கெல்லாம் கொண்டுசெல்லத் தேவை இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்திய ஒற்றுமை பாதயாத்திரை- 2 வது நாள் பயணத்தை தொடங்கிய ராகுல்