ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனையால் அவருக்கு 8 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிடாமல் போகும் நிலைமை ஏற்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு மோடி பெயரை அவரின் சமூகம் சார்ந்து பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பால், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று, சென்னை வருவதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது இந்த செய்தியை அறிந்து உடனடியாக ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில், ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், இந்த வழக்கில் ராகுல் காந்தி தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளது.
இந்த மேல்முறையீட்டில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டால், ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை திரும்ப பெறுவார். இதுவே, தடை விதிக்கப்படாமல் இருந்தால் ராகுல் காந்தி 2 ஆண்டுகள் சிறை செல்ல நேரும். அதேநேரம், சிறைத்தண்டனைக்கு பிறகு ஆறு ஆண்டுகாலம் எந்தவித பொது தேர்தலிலும் பங்குபெற முடியாத நிலை ராகுல் காந்திக்கு ஏற்படும். மொத்தம் அவருக்கு 8 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிடாமல் போகும் நிலைமை வரலாம் என சட்ட நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இப்படியான சூழல்களால், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது குறித்த ஆவல் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
ஏழைக்கு ஒரு சட்டம், ராகுல் காந்திக்கு ஒரு சட்டம் இல்லை- பாஜக அண்ணாமலை