தமிழகப் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதியை இன்று (செப்டம்பர் 16) பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, நடப்பு கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்களின் கல்வித் திறனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 15) பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு இல்லை என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதேபோல், பள்ளிகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டு தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தேதிகளை முடிவு செய்து காலாண்டு தேர்வு நடத்தும் தேதிகளை முடிவு செய்து, இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இன்று (செப்டம்பர் 16) பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, 1 முதல் 5 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 5 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எண்ணும் எழுத்தும் திட்ட வளரி மதிப்பீட்டுத் தேர்வுக்காக, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை நாட்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.