புதுச்சேரியில் உயிரிழந்த பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு, உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி அஞ்சலியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு லட்சுமி யானைக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர்
புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி இன்று காலை நடைபெயிற்சி மேற்கொண்டபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. 32 வயதான லட்சுமி யானையின் உயிரிழப்பு புதுச்சேரி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்திய நிலையில், லட்சுமி யானையின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மணக்குள விநாயகர் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று யானை லட்சுமிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பின்னர், மாலை 3 மணியளவில் அர்ச்சகர்கள் யானை லட்சுமிக்கு சிறப்பு பூஜை செய்தனர்.
இதனை தொடர்ந்து யானை லட்சுமி மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து செஞ்சி சாலை, நேரு வீதி, அண்ணா சாலை, மறைமலையடிகள் உள்ளிட்ட நகரின் வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லபட்டு, வனத்துறை அருகில் உள்ள ஜெவிஎஸ் நகருக்கு கொண்டுவரப்பட்டது. இறுதி ஊர்வலத்தின்போது வழி நெடுகிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு லட்சுமி யானைக்கு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து ஜெவிஎஸ் நகருக்கு கொண்டுவரப்பட்ட லட்சுமி யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மெட்ராஸ் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் புதுச்சேரி கால்நடை மருத்துவக் கல்லூரியை சேர்ந்த 17 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் யானை லட்சுமிக்கு மாலை 5:10 மணிக்கு ஆராம்பித்து 6:50 மணியளவில் (சுமார் 1 மணி நேரம் 40 நிமிடம்) உடற்கூறு ஆய்வு நடத்தினர். பின்னர் தோண்டி வைக்கப்பட்டிருந்த குழியில் விபூதி, உப்பு, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் ஊற்றி லட்சுமி யானை நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி அஞ்சலியின்போது பொதுமக்கள் திரளாக கூடியிருந்து லட்சுமி யானைக்கு கண்ணீர் மல்க மலர் தூவி பிரியாவிடை அளித்தனர்.
மேலும் அடக்கம் செய்யும் குழுயில் இறங்கி பாகான் யானையை கட்டி அனைத்து அழுவும் காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
லட்சுமி இல்லாமல் கோவிலுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை; தமிழிசை சௌந்தரராஜன்