புதுச்சேரியில் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் சமீபகாலமாக முத்தியால்பேட்டை, கருவடிக்கும்ப்பம், உழவர்கரை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் புதியதாக மதுபாடன கடைகள் மற்றும் நடனத்துடன் கூடிய மதுபான விடுதிகள் அமைக்க உரிமம் வழங்கப்பட்டு அவைகள் திறக்கப்பட்டது.
குடியிருப்பு பகுதிகளில் மதுபான கடைகள் வைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்தந்த பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு கூட முத்தியால்பேட்டையில் உள்ள நடனத்துடன் கூடிய மதுபானக்கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.
இந்நிலையில், பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் மதுபானக்கடைகளை அமைக்க உரிமம் வழங்கிய முதல்வர் ரங்கசாமியை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர் இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து முதல்வர் ரங்கசாமி வீட்டை முற்றுகையிடுவதற்காக ஊர்வலாமாக சென்றனர்.
அப்போது, ராஜீவ்காந்தி குழந்தைகள் மருத்துவமனை அருகே காவல்துறையினர் விடுதலை சிறுத்தையினரை தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இதைத்தொடர்ந்து முற்றுகையிட வந்த விசிகவினரை கைது செய்து அழைத்து சென்றனர்.
வாரிசு இசை வெளியீட்டு நிகழ்வின்போது தள்ளுமுள்ளு; வெளிவந்த வீடியோ!