குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை 21) காலை 11 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 18) நடைபெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் திரௌபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் ஜூலை 18-ம் தேதி நடைபெற்றது. அதற்கு அடுத்த நாளே (ஜூலை 19) அனைத்து வாக்கு பெட்டிகளும் தில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 11 மணி அளவில் தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் தேர்தல் அதிகாரி முன்பு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
மேலும், இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் தேர்தலில் வெற்றி பெற்றால், நாட்டின் உயரிய அரசியலமைப்பு பதவியை பெறும் முதல் பழங்குடியினப் பெண் என்ற பெருமையை பெறுவார்.
இதனிடையே, தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைய உள்ளது. இதைத்தொடர்ந்து வெற்றி பெறும் புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25-ம் தேதி பதவி ஏற்பார்.
குடியரசுத் தலைவர் தேர்தல்- 99 சதவீதம் வாக்குப்பதிவு