வெள்ளத் தடுப்பு பணிகளை கண்காணிக்க 15 மண்டலத்திற்கு 17 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து இருப்பதாக சென்னை மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மேயர் சிவராஜின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தங்கசாலையில் உள்ள அவரது சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு அரசு சார்பில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
மரியாதை செலுத்தியப் பின்பு சென்னை மேயர் பிரியா ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையும் படிங்க:நிலம் கையகப்படுத்த சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும்.. என்எல்சிக்கு அன்புமணி எச்சரிக்கை
அப்போது, அவர் பேசியதாவது:
சென்னை மாநகராட்சி, மழைநீர் வடிகால் பொறுத்தவரை உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் சிங்கார சென்னை திட்டத்தில் இரண்டாக பிரித்து பணிகள் செய்து வருகிறோம். சிங்கார சென்னையைப் பொறுத்தவரை இரண்டில் ஒரு பகுதியில் 95 சதவீத பணி நிறைவடைந்து இருக்கிறது. இரண்டாவது பகுதியைப் பொறுத்தவரை 35 சதவீத பணிகள் நிறைவடைந்து இருக்கிறது.
மேலும், கடந்த ஆண்டு சென்னையில் எந்த இடங்களில் வெள்ளம் அதிகமாக பாதிக்கப்பட்டதோ, அந்த இடங்களை தேர்வு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இவற்றில் 5 சதவீத பணிகள் மட்டுமே இருக்கிறது. அக்டோபர் 10-ம் தேதிக்குள் இந்த பணிகள் நிறைவடைந்துவிடும்.
வெள்ளத் தடுப்பு பணிகளை கண்காணிக்க 15 மண்டலத்திற்கு 17 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து இருக்கிறோம். மழை தேங்கி உள்ள பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறாக சென்னை மேயர் பிரியா ராஜன் பேசினார்.