எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியின் 4-வது சுற்றில் பிரபல வீரர் லெவோன் ஆரோனியனை இந்திய வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பிறகு அமெரிக்காவின் மியாமியில் நடைபெறும் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியில் கலந்துகொண்டு தற்போது விளையாடி வருகிறார் இந்தியாவின் பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா.
இந்த போட்டியில், முதல் சுற்றில் உலகின் தலை சிறந்த ஜூனியர் வீரர் அலிரேஸா ஃபிரோஜாவை 2.5-1.5 என்ற கணக்கிலும், இரண்டாம் சுற்றில் 2.5-1.5 என்கிற புள்ளிக்கணக்கில் அனிஷ் கிரியையும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. மேலும், 3-வது சுற்றில் அபாரமாக விளையாடி 2.5-1.5 என ஹான்ஸ் நீமன்னை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.
இந்நிலையில், 4-வது சுற்றில் பிரபல வீரர் லெவோன் ஆரோனியனை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. முதல் இரு ஆட்டங்களும் டிரா ஆகிய நிலையில், அடுத்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 3-1 என ஆரோனியனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. 3-வது ஆட்டத்தில் 11-வது நகர்த்தலிலேயே பிரக்ஞானந்தா ஆட்டத்தைத் தன் வசம் கொண்டு வந்தார்.
4 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா, கார்ல்சனுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார். 5-வது சுற்றில் லியம் லீயை பிரக்ஞானந்தா எதிர்கொள்கிறார்.