பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது.
மணிரத்னம் – இந்திய திரையுலகமே வியந்து காணும் ஒரு இயக்குநர். ஒவ்வொரு முறை மணிரத்னம் இயக்கத்தில் இருந்து திரைப்படங்கள் வெளியாகும்போதும் மக்களிடையே எழும் எதிர்பார்ப்புகள் ஏராளமானவை. இவர் இயக்கும் அனைத்து திரைப்படத்திற்கும் இருக்கும் எதிர்ப்பார்ப்பை விட தற்போது மணிரத்னம் இயக்கி கொண்டிருக்கும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகம்! இந்த அதிக எதிர்ப்பார்ப்பை உடைய திரைப்படத்தின் பெயர் பொன்னியின் செல்வன்!
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டு வரும் திரைப்படம்தான் இந்த பொன்னியின் செல்வன். உங்களின் கனவு திரைப்படம் என்ன என்ற கேள்வி மணிரத்தனம் அவர்களிடத்தில் கேட்கப்படும்போது, மணிரத்னம் தந்த பதில் “பொன்னியின் செல்வன்”. அப்போது ஆரம்பித்த எதிர்ப்பார்ப்புதான் தற்போது வரை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக படப்பிடிப்பில் இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்று பலரும் ஆவலுடன் காத்திருக்க, மக்களின் ஆவலுக்கு பதிலாய், பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி என்று படக்குழுவால் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதைமாந்தர்களை அவ்வபோது போஸ்டராக இணையதளத்தில் படக்குழு வெளியிட்டு வந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளிவந்தது.
ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருந்து முன்னதாக ‘பொன்னி நதி’ என்கிற பாடல் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலாக ‘சோழா சோழா’ எனும் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கு இளங்கோ கிருஷ்ணன் வரிகள் எழுதியுள்ளார். பாடகர்கள் சத்யபிராகஷ், நகுல், வி.எம். மஹாலிங்கம் ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர்.
மேலும், இப்பாடல் வெளியிட்டுக்கு என ஹைதராபாத்தில் நிகழ்ச்சியொன்று, இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.