அதிமுக கட்சியினரிடையே வரும் 23ம் தேதி நடைபெறவிருக்கும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தினை தள்ளி வைக்குமாறு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கட்சியின் உறுப்பினர்கள் எனக்கும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர்.
எம்ஜிஆர் காலம் தொட்டு இது வரை பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்ட சமயங்களின் போது பின்பற்றப்பட்ட விதிமுறைகளை இந்த முறை நீங்கள் பின்பற்றவில்லை என்று கூறி சில கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
இது குறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம்.’ என்று கூறியுள்ளார்.
கடிதத்தின் விபரம்..
23.06.2022 அன்று நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் 14.06.2022 அன்று அதிமுகவின் தலைமைக் கழகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
மண்டபத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்ற தகவலைத் தாங்கள் (எடப்பாடி பழனிசாமி) தெரிவித்தீர்கள்.
கூட்டம் அழைக்கப்பட்டதன் பொருள் குறித்து விவாதித்த பிறகு எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை குறித்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
பல ஆண்டுகாலமாக அதிமுக நடத்தும் பொதுக்குழுக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற/சட்ட மன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர்கள், கட்சிக்காக தியாகம் செய்து உழைத்த முன்னோடிகள் ஆகியோரை அழைப்பது நடைமுறையில் உள்ளது.
ஆனால் 23.06.2022 அன்று நடைபெறவுள்ள பொதுக்குழுவில் இந்த நடைமுறையானது பின்பற்றபடப்போவதில்லை.
இந்த தகவலினை அறிந்த கட்சியின் உடன்பிறப்புகள் தொலைபேசி வாயிலாக எங்களைத் தொடர்புகொண்டு தங்களையும் அழைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து வருகின்றனர்.
இதுவரை சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்ட நிலையில் இந்த முறை அனுமதி கிடைக்காதது குறித்தது தங்களது ஆதங்கத்தினைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல், 14.06.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சில மாவட்ட கழகச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் சிலர் கழக விதிகளை உணராமல், ஒற்றைத் தலைமை குறித்த கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அத்தகைய கருத்துகளால் தொண்டர்கள் கொதித்துப்போயுள்ளனர். கழக நிர்வாகிகள் மத்தியிலும், தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியிலும் குழப்பமான மனநிலை நிலவுகிறது. இந்த அசாதாரண சூழ்நிலைக் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் அமைதி காக்க வேண்டி தொண்டர்களுக்கு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
பொதுக்குழு தொடர்பான பொருள் அடங்கிய விபரம் கிடைக்கப்பெறவிலையென கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் , பல மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் முறையிட்டுள்ளனர்.
கூட்டத்திற்கான பொருள் நிர்ணயம் செய்து கூட்டத்தை நடத்துவது அவசியமாகிறது என சட்ட வல்லுநர்கள் கருத்துகின்றனர்.
மேற்காணும் சூழ்நிலைகளை கருதி ஜூன் 23ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தினை தள்ளிவைக்கலாம் என்றும், அடுத்தக் கூட்டத்திற்கான தேதி நேரம் ஆகியவற்றினை கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய நாம் இருவரும் கலந்தாலோசித்து பின்னர் முடிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.