47 வயதான பிரபல பாடகர் பம்பா பாக்யா உடல் நலக்குறைவால் காலமானார்.
சுயாதீன இசையில் ‘மெட்ராஸ் கிக் சிங்கிள்ஸ்’ என்பதின் கீழ் வெளிவந்த ‘எதுக்கு உன்ன பாத்தேன்னு நெனைக்க வைக்கிறே..’ பாடல் மூலம் இளைஞர்கள் மத்தியில் அறிமுகமானவர் பாம்பா பாக்யா.
இதன்பிறகு, ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். குறிப்பாக, ரஜினிகாந்த் நடித்த எந்திரன் 2.0 திரைப்படத்தில் இவர் பாடி இடம்பெற்ற ‘புள்ளினங்கால்’ கேட்போரை சொக்க வைத்தது என்றே கூறலாம். அதன் பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிகில், சர்கார், சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் பாடினார். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற சிம்டாங்காரன் பாடலைப் பாடினார். இந்தப் பாடலால் பலராலும் அறியப்பட்டார், பம்பா பாக்யா.
மேலும், மணிரத்னம் இயக்கத்தில் இம்மாதம் வெளியாகும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘பொன்னி நதி’ பாடலையும் பம்பா பாக்யா பாடியுள்ளார். ‘பொன்னி நதி’ பாடலில் பம்பே பாக்யாவின் குரல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பொன்னி நதி வந்த புதிதில் சமூக வலைதளங்களில் இவர் குரல் குறித்து நல்ல விதமாக புகழ்ந்து பேசப்பட்டது.
இந்நிலையில், எதிர்பாராதவிதமாக அவருக்கு நேற்று (செப்டம்பர் -2) இரவு மாரடைப்பு ஏற்பட்டு, அண்ணா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு இதயத் துடிப்பு, சிறுநீரக செயல்பாடுகள் குறைந்ததாலும், வயிற்றில் அதிகப்படியான திரவம் உள்ளதாலும், அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற திட்டமிட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பம்பா பாக்யா உயிரிழந்தார்.
பம்பா பாக்யாவின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவருக்கு இசையமைப்பாளர்கள் சங்கத் தலைவர் தீனா உள்ளிட்ட இசைத் துறையினரும், திரையுலகினர் மற்றும் ரசிகர்ககளும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.