பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான இசை வெளியீட்டு விழா மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகிய திரைப்படம்தான், பொன்னியின் செல்வன்.
கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்த இத்திரைப்படம் இரு பாகங்களாக உருவாகியுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வெளிவந்து பற்பல சாதனைகளை நிகழ்த்தியது. குறிப்பாக, 450 கோடி என்ற மாபெரும் வசூல் சாதனையை புரிந்தது.
இதைத்தொடர்ந்து, சமீபத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ‘பொன்னியின் செல்வன்-இரண்டாம் பாகத்தில்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்பாடலானது, அருண்மொழி வர்மன் மற்றும் வானதிக்கும் இடையேயான காதலை மையமாகக் கொண்டு அமைந்துள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இப்பாடலை பாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் அல்லது இறுதியில் நடைபெறும் என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அதேவிழாவில் படத்தின் டிரைலரும் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற வித்தியாசமான முறையில் திருமண ஊர்வலத்தை நடத்திய பேரன்மார்கள்